Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அம்மா உணவகத்தில் உணவு வாங்க கூட்டமாக கூடி நிற்கும் மக்கள்

மே 03, 2020 10:13

கரூர்: குளித்தலை அம்மா உணவகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நிற்கின்றனர்.

குளித்தலை அரசு மருத்துவமனையையொட்டி செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் காலையில் இட்லி, பொங்கலும், மதிய நேரத்தில் சாம்பார், தயிர், தக்காளி சாதமும் மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களும் அவருடன் உள்ள நபர்களும் குளித்தலை பகுதியில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் இந்த அம்மா உணவகத்தில் உணவு உண்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த அம்மா உணவகத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நின்று உணவுகள் வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை கண்காணிக்க நகராட்சி சார்பில் அலுவலர்கள்
நியமிக்கப்பட்டனர். மேலும் கடந்த வாரம் முதல் அம்மா உணவகங்களில் காலை மாலை இரவு என மூன்று வேளைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக அம்மா உணவகத்தில் வழக்கமாக உணவு வாங்கி உண்பவர்களை விட கூடுதலான பொதுமக்கள் தினமும் உணவு வாங்க கூட்டமாக கூடி நிற்கின்றனர். அவ்வாறு வருவோர் சமூக இடைவெளிவிட்டு நிற்காமலும் முக கவசம் அணியாமலும் இருக்கின்றனர். கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டுமென அதிகாரிகள் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் அதை கடைபிடிக்காமல் இருப்பது குளித்தலை பகுதியில் வழக்கமாகி வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்களால் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என எண்ணி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளிவிட்டு நின்றும் உணவை வாங்கி செல்ல வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்